Wednesday, 22 October 2025

மழை மோகம்

இரவின் சாளரம் 

மெல்லிய மழைத்துளிகள்

இருளின் களிப்பாய் பொழிகின்றன

நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்

கொட்டும் துளிகளைத் தொட்டன 

கந்தர்வ ஸ்பரிசமாய் 

கைகளைத் தழுவிய துளிகள் 

நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை

அவள் வாயிற்கதவத்தைத் தட்டின

முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக் 

கடக்கும் பொழுதினில் 

ஏற்பட்ட அணுக்கம் போன்றது

அவளுக்கும் அவனுக்குமான பற்று

தாமதிக்காமல் தாழ் திறந்தனள்

வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்

மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு 

கழுத்தில் இறங்கியது

முழுவதுமாய் நனைந்து நிற்க

அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்

மீண்டும் பெரும் கார்முகிலொன்று

இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது 

முதற்கதிர் எழும்வரை... 



மழை மோகம்

இரவின் சாளரம்  மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன  கந்தர்வ ஸ்பர...