நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள்
வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி
வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ?
பசலையுற்ற தேகம் கண்டு
முதற்கோடை மழையில்
முழுதாய் நனைந்திடும் பிரியம்
உதிரும் மலர்களின் சபலம்
காற்றை இறுகப் பற்றிடும்
இளவேனிற் காதல்
பின்வேனிற் களவு
இரண்டும் மிதமாய்த் தேவையென
விழிசிமிட்டிற்ற நிலவு
இரவெனும் விரிசடைதனில்
எழிலணிகலன் இம்மலர்கள்
நித்திய நிலவொளியில்
கண்ணாடி வளைகளிட்ட ஒருத்தி
நீள்குழல்தனை அள்ளிமுடித்து
ஆடிதனை நோக்கி
அஞ்சனமிட்டு
செர்ரி மலர்க்கற்றையை
சூடிக்கொண்டனள்
மணாளனின் பார்வைதனில்
தீக்கொன்றையாய் மாறிற்று