Tuesday, 26 September 2023

மகன்றில் களவு 4

பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை

நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்

நொடியில் பிடுங்கி மேசையில்

வீசினான்

சிதறிய மலர்களின் மணம்

நாணமுற்றன

அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை

அவன் மூச்சுக்காற்று சுவைத்த

நொடிதனில்

- வெண்பா கீதாயன் 

Thursday, 21 September 2023

மகன்றில் களவு 3

சேடல் முகிழ் பொழுதது

மோதி விளையாடும் முகில்கள்

சிதறிய நூபுர முத்துப்பரல்கள் 

அடர்வன ஓர் வகிடுப் பாதையில் 

தேடிட நேரமன்று

என்றோ அவ்வழியே அவன் வரவு

தாள்தனில் உறுத்திய பரல்கள் 

கணப்பொழுதில் அவள் உரு

எழுந்து அணைந்தது 

வெறி கொண்ட அணங்கென 


- வெண்பா கீதாயன் 

Tuesday, 12 September 2023

மகன்றில் களவு - 2

அதிகாலையா பின்னிரவா என்றறியாத வேளையில்

ஒளிரும் விண்மீன்களுக்கிடையே

ஏதோவொரு விண்மீன்

என் சாளரத்தில் அமர்ந்தது

அதனிடம் பெயர் கேட்க புரண்டு படுத்தேன்

அத்தனை மிளிர்வுடன்

நின்றொளிர்ந்தது

விழிகள் கூசிட

அவன் பெயர் இட்டேன்

இன்னும் நெருக்கத்தில் வந்தமர்ந்தது விண்மீன்

சாளரத் திரையை இழுத்துவிட்டு

கண்களை மூடிக் கொண்டேன்


-வெண்பா கீதாயன் 

Monday, 11 September 2023

மகன்றில் களவு 1

பெரும்பொழுதுகள் பல கடந்து
யாமத்துத் துயில்களைத் துறந்து
ஆதியுகத்தினில்
காதலுற்ற அரிவையும் அவளவனும்
திகட்டும் முயக்கத்தில்
நிலத்தின் ஆழத்தில் 
அமிழ்த்திய மதுக்குடுவை
அவனுக்குக் கிடைக்கப்பெற்றது 
இக்கார்காலத்தில் 
அம்மதுவின் துளி ருசி
அவளது காதல் 

- வெண்பா கீதாயன் 

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...