Friday, 3 May 2024

மகன்றில் களவு 15

பிரிந்து கூடிடும் முகில்களின் ஒருநாள்

முகில்களற்ற தெளிந்த வானின் ஒருநாள்

பகலில் தெரியும் நிலவின் நாளும் கூட

பொழுதுகள் புலப்படா நாளும் அதுதான்

கருமுகில் உதிர்க்கும் முதற்துளியின் நாளது

அந்நாள்தனில் மொழிந்த சொற்கள்தாம்

கோடைகாலத்துப் பெருமழை

போதும் சொற்கள்

கோர்த்து அணிகலனாய் சுமந்திட

எடை தாளாது

முன்னொருநாள்

அரிவையின் கூந்தல் விலக்கி

சுவாசத்தின் சத்தம் கேட்டிடும் நெருக்கத்தில்

இதயத்தின் முணுமுணுப்பின் அணுக்கத்தில்

அவன் சொல்லிச் சென்ற வரிகள் சில

அவள் மேனியை அணிசெய்திடும் துகில்களென

நாணத்தைக் கவர்ந்து ஒளிந்தவனுக்கு

அவ்வரிகளை நினைவுபடுத்துமோ? 

இந்நாட்கள்


- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...