Friday, 14 August 2026

காதல் - Madness vs Toxic



காதல் என்கிற உணர்வு முற்றிலும் madness சார்ந்தது. இயல்பாகவோ logicalஆகவோ consciousஆகவோ ஒருவர் இருந்தால் காதலில் விழவே முடியாது. தைரியமாக இருவரும் அந்த உன்மத்தத்தை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் காதலர்களாக மாறுகிறார்கள். 

தொடக்கத்தில் புதிதாக வாங்கிய சைனா டிரான்ஸிஸ்டர் போல இந்தக் காதல் அன்ட்டனா உயர்த்தாமல் இனிய பாடல்களுடன் ஜாலியாகப் போகும். பிறகு sync இல்லாமல் antennaவை உயர்த்தும் தருணங்கள் எழும். இங்குதான் convinceஆவது, adjustஆவது, சகித்துக் கொள்வது, ஊடல்கள் சண்டையாக மாறி திரும்ப சமாதானம் ஆவது போன்ற அடுத்த நிலைக்கு போகும். இந்த நிலைக்கு செல்லும் போது காதலில் 6 மாதம் to 1 வருடம் ஆகியிருக்கும். 

அடுத்த நிலை break up zone, இதில் டிரான்ஸிஸ்டரில் இருந்து இரைச்சல் மட்டுமே எஞ்சும். போன வருடம் க்யூட்டாக தெரிந்ததெல்லாம் இப்போது கடுப்பாகும். இந்த சமயத்தில் physical violence, verbal abuse போன்ற நிகழ்வுகள் நடந்தால் toxic relationship என்று break up செய்யலாம். ஆனால் அப்படி இல்லாமல் mood swing கிச்சுகிச்சு சண்டைகள், திரும்ப மன்னிப்புகள், கொஞ்சநாள் space எடுத்துக் கொண்டு திரும்ப காதலிப்பது, ஒரு vacation கூட்டிச் சென்று சமாதானப் படுத்துவது, எப்படியாவது இந்த காதலை காப்பாற்றி விட வேண்டும் என இருவரில் ஒருவர் நினைக்கும் பட்சத்தில் மற்றொருவர் தன்னுடைய இணை narcissist, selfish, insecured, love bombing செய்பவர், control செய்பவர், சிறை போல இருந்தேன் என கூறி அந்த relationshipல் கழன்று கொள்வார். ஆண், பெண் இருபாலரும் இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். 

இதில் ஆண்கள் இப்படி புலம்பும் போது இரக்கம், ஆதரவு கிடைக்காமல் பரிதாபம் எஞ்சும், சில நேரங்களில் அந்த காதலி அழகாக இருந்தால் backfire ஆகும் ஆபத்தும் உள்ளது. அதே பெண்கள் சொல்லும் போது அடுத்த சைனா டிரான்ஸிஸ்டராக மாற ஆண்களே ஆமோதித்து அப்பெண்ணை ஊக்குவித்து கைத்தட்டுகின்றனர். 

அனுபமா வரையறுக்கின்ற பண்புகளில் பல பெண்கள் தங்களுடைய இணைகளிடம் நடந்து கொண்டாலும் அது mood swings என்று ஒற்றை வார்த்தையில் கடக்கப்படுகிறது. ஆனால் ஆண்களை toxicஆக frame செய்வது எளிதாக இருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை ஒரு relationshipஇல் இருந்து பிரிந்தால் கண்ணியமாக இருவரும் past குறித்து பொதுவில் பேசாமல் பழைய காதலின் இனிமையுடன் விடை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை பேசினால் betterஆக இருக்கும் எனில் நம்முடைய therapist அல்லது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் கெட்ட வார்த்தையில் கூட திட்டிக் கொள்ளலாம். ஆனால் பொதுவில் பழைய காதலன் குறித்து பேசுவது பழிவாங்கல் தவிர்த்து வேறு ஒன்றுமில்லை. 


#anupamaparameshwaran

Saturday, 8 August 2026

பார்வதி - தாஸ் & சந்திரா - வழிப்போக்கர்களின் பழிவாங்கல் கதை


வெகுநாட்களுக்குப் பிறகு 2010களின் ஒளி, காட்சியமைப்பு, நிலப்பரப்பு என அனைத்தும் நினைவுகூரப்படும் வகையில் கச்சிதமாக அருண் மாதேஸ்வரனால் செதுக்கப்பட்டுள்ளன. CCTV காமிராக்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழ்ந்த அநீதிகளும் அதற்கான பழிவாங்கும் படலமுமே கதை. கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், அதற்காக சிந்தும் குருதி என கதையில் மனிதனின் IDயும் egoவும் Adrenaline rushஐ அதிகரிக்கச் செய்கின்றன. 

உளவியலாளர்கள் பலரும் உளவியலில் ஒரு மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகளை அவனது குழந்தைப்பருவம் தீர்மானிக்கும் என்பார்கள். DCயின் கதைமாந்தர்கள் அனைவருக்கும் இந்த Childhood trauma இருக்கிறது. பெரியவர்களாக மாறிய பிறகு அந்த inner childrenஇன் போராட்டம்தான் திரைக்கதை. 

இங்கே பெரியவர்கள் ஆன பின் குழந்தைப்பருவ காயங்களை மறந்து விடுவோம், அல்லது அதை cope up செய்ய கல்வி, வாசிப்பு, வேலைவாய்ப்பு, வசதி, பணம், போதை, கலவி என எதற்குள்ளாவது புகுந்துகொண்டு வெளியே நம் பால்ய இருண்மைகளை மறைத்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால் இதற்கான வாய்ப்பற்றவர்கள் நிகழ்கால இருண்மையில் உழல்பவர்கள் மீள்வதற்கு பதிலடியாக வன்முறையை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அதை லோகேஷ் நடிப்பில் அற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார், தன்னை தேவதாஸாக முழுதாக அருணிடம் ஒப்படைத்துள்ளார். 

அதேபோல சந்திராவும் ஒரு மருத்துவரைத் தனக்கு கடந்த காலத்தில் நிகழ்த்திய அநீதிக்காக கன்னாபின்னாவென சுடுவார். பார்வதியும் தன்னுடைய ஆசையைத் தருணமாக வாழ்ந்துவிடுவார். இறுதியில் தாஸும் சந்திராவும் தமக்குக் கிடைக்காத குழந்தைப்பருவத்தை இன்னொரு சிறுவனுக்கு அளித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்கின்றனர். 

DC திரைப்படமானது inner child குறித்த பிரக்ஞை அற்றவர்கள் அல்லது நல்ல குழந்தைப்பருவம் கொண்டவர்கள், past trauma அற்றவர்களுக்கு வெறும் வன்முறையாக அல்லது தேவையற்றதாகத் தோன்றும். எப்போதும் LEDக்களுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கு இருண்மை கூச்சத்தைத் தரும். Devadas Chandra அந்த இருண்மையின் மின்மினிகள்.

#DC

Friday, 31 July 2026

முதற்களவு

திறந்து கிடந்த கதவுகள் 
ஆரஞ்சுப் பூனையாக நுழைந்தேன் 
அடுக்களையிலிருந்து பரவும் மணம் 
சட்டையின் கைமடிப்புகளில் வியர்வை 
எனக்கான விருந்தின் இறுதிகட்டம் 
சத்தமேதுமற்று அவன் முதுகில் கன்னம் பதிந்திட அணைப்பு
வெளியே மழையும் மண்ணும் கலவிடும் மணம்
கழுத்தென்று நினைத்து எங்கோ அச்சிட்ட முத்தம்
முதற்களவின் அசட்டுத்தனம்
பொருளற்ற சிரிப்பு
மேசையில் அடுக்கப்பட்ட விருந்து
அன்பின் அடுக்குகளாய் லஸான்யே
முத்தத்தின் இனிமையாய் பிரௌனி
களவின் நிமித்தமாய் ஃபென்னி
பின்னால் இசைத்திடும் செல்லோ
காற்றுடன் தழுவிடும் திரைச்சீலைகள் 
அவன் மொழியறியாது என் மொழி 
இருப்பினும் அவன் விரல்களுள் இசைந்திடும் விரல்கள் 
களவில் விழிகடந்து மொழிக்கென்ன வேலை? 
சமைத்திற்ற கைகளுக்கு அளித்திடப் போதவில்லை! 

Sunday, 5 July 2026

நிகரிலி நறவு

அந்த அறையில் அவர்களுள் எந்தப் பரிச்சயமும் தேவைப்படவில்லை 
அவள் அலெசாந்ரோவின் வீனஸ் என நின்றிருந்தாள்
அறையின் உறைகுளிர் உணர்விலில்லை 
தழுவலில் என்ன உன்மத்தம்?
வாசனை!
விரல்களில் இதழிட சிகரெட் 
பின்கழுத்தில் ஏவாள் கடித்த ஆப்பிள்
மிடற்றில் சவரம் செய்த திரவ நறுமணம் 
வியர்வையில் விஸ்கி 
கைகளில் அவன் கொண்டு வந்த பியோனி மலர்கள்
இத்தனை அடுக்கு வாசனைக்குறிப்பு 
சுவர்க்கத்திலும் கிட்டாது
கற்றை முடியைப் பற்றிக்கொண்டு 
அருநறவுதனை உயிரினில் தோய்த்தனள்

Sunday, 7 June 2026

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள்
தெரிகின்ற பசுமைக் காடுகள் 
அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண் 
தும்பிகளின் கூடற்களி 
மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைகள்
பாறைகளில் அவிழ்ந்து நிற்கும் கதிர்காந்தப்பூக்கள் 
அவன் மெதுவாக இமைத்து 
மீண்டும் நோக்கினான்
இவ்விழிகளுள் தொலைவதைவிட வேறென்ன பேரின்பம்
அம்மரகதக் காட்டினில்
கதிர்காந்தப்பூ கொண்டு 
காவியங்கள் படைத்தனள்

Tuesday, 21 April 2026

யாமத்தின் வாசனை

துயில் மெதுவாய் கவிந்திடும் பொழுதினில் 
எவர் வரவுக்காய் அலரும் ஆம்பல்?
திரைகளை மெல்லத் தழுவிடும் வாடை
இடைமேகலையின் கனவினை அறிந்திடும்
துகிலின் நிந்தனை தாளாது
தொய்யில் இன்னும் சிவந்தது
மலர்கணை உடன் கிடந்திட
மாமுகில் பொழிந்திடும் மழையென 
மாமையை மாயையைக் களைந்திட
வாடிய வார்துகில் அவிழ்ந்திட 
வாடையின் வாடலும் கரைந்திட
மலர்ந்தனள் மற்றொரு ஆம்பலாய் மஞ்சத்தில் 
அறையெங்கும் யாமத்தின் வாசனை

Sunday, 19 April 2026

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள்
வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி 
வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ? 
பசலையுற்ற தேகம் கண்டு
முதற்கோடை மழையில் 
முழுதாய் நனைந்திடும் பிரியம்
உதிரும் மலர்களின் சபலம் 
காற்றை இறுகப் பற்றிடும்
இளவேனிற் காதல்
பின்வேனிற் களவு 
இரண்டும் மிதமாய்த் தேவையென 
விழிசிமிட்டிற்ற நிலவு
இரவெனும் விரிசடைதனில் 
எழிலணிகலன் இம்மலர்கள்
நித்திய நிலவொளியில் 
கண்ணாடி வளைகளிட்ட ஒருத்தி 
நீள்குழல்தனை அள்ளிமுடித்து
ஆடிதனை நோக்கி
அஞ்சனமிட்டு
செர்ரி மலர்க்கற்றையை
சூடிக்கொண்டனள்
மணாளனின் பார்வைதனில் 
தீக்கொன்றையாய் மாறிற்று

Thursday, 5 March 2026

ஆற்றின் நிலவு

ஆற்றின் குறுக்கே ஒளிமிகு படகொன்று
இருண்மையின் தேவதையாய் எழுந்த செந்நிலவு
புதர்மண்டிய கரைதனில்
ஓநாய்களின் உண்டாட்டு
செழுமையான மானின் நறுங்கொழுப்பினைக் கவ்வி இழுத்துவந்து
பெண் ஓநாய்முன் போட்டு
குருதி தோய்ந்த பற்கள் நகைத்திட 
காதலை மொழிந்தது ஆண் ஓநாய் 
பெண் ஓநாய் நாணிக் கொழுந்துண்டை மென்றது
செந்நிலவு தேவதை ஆசியைப் பொழிந்து
ஆகாயப்பொதியினுள் மறைந்திட 
ஓடத்தினின்று அவன் கை செவ்வல்லிதனை 
எட்டிப்பறித்திற்று
அருகே மேகலை சுற்றிய யிடைதனை யிழுத்து
தொய்யிலிட்ட மேனிக்கு சூடினன்
ஓநாய்கள் உன்மத்தமாய் பாடின
பேரியாழின் முழக்கமென... 

Wednesday, 25 February 2026

இரவுக்களிப்பு

திரைச்சீலைகளின் குவிப்புக்கு
ஒருபுறம் அவளும்
மறுபுறம் அவனும்
சந்தித்துக் கொள்ளா விழிகள் 
வால்ட்ஸ் நடன இசை துவங்கியது
மெய்மறந்து தியானிப்பதைப் போல் 
சுற்றியாடும் இணையர்கள் 
புதுப்புனல் அள்ளிவரும் பூங்கற்றையாய்
மடந்தையரது நீள்துகில்கள்
எங்கும் பிணையாது துள்ளிட
முதன்முறை அவர்கள் பற்றிக்கொள்ள
முகத்திரைகளுக்கு இடையே 
செவ்விழிகளும் கருவிழிகளும் 
மின்கீற்றாய் முத்தமிட 
உணர்ந்திடும் முன்பே 
கைகள் மாறிட 
அசைவுகள் சுற்றிட 
மீண்டும் அதே இறுகப்பற்றும் விரல்கள் 
இம்முறை அவளதரம் 
இன்னும் இறுக்கமாய் 
அசைவுகள் பிழைத்திட 
முகத்திரையை இழுத்தனன் 
வெடுக்கென திரளுள் மறைந்தனள் 
தேடிற்ற விழிகளுக்கு பரிசாய்க் கிடைத்தது
பியோனிமலர் வாசனை கொண்ட முகத்திரை! 

Saturday, 21 February 2026

பளிங்கு அரங்கு

மாலையின் பொன்னொளியில் 
பளிங்கு அரங்கின் ஓரத்தில் 
கண்ணாடி மதிலுக்கு வெளியே
கரை தழுவிக் கடக்கும் கடலலைகள் 
மேசையில் இரு பீங்கான் கோப்பைகள்
மெல்ல எழுகிற வாசனை 
அகத்தின் துளி மோகம் போல்
அவன் விரல் நுனி ஸ்பரிசம் போல்
காஃபி கோப்பையின் கதகதப்பு
மழுங்கும் ஒளிக்கிடையே
பைசாந்திய முணுமுணுப்புகள் 
அசையாத விழிகளின் 
அறிந்திற்ற மொழியுணர்ந்து
நாண்களை மீட்டும் பாணன்
மிடற்றில் எழுந்த கசப்பாய்
வனதேவதையின் முத்தம் 
மதுரப்பரல்கள் சேர்த்திட
மறைந்தனள் தேவதை 
கையெழுத்தாய் 
கழுத்தில் அவளது நகக்குறி 
அவள் வருகையின் தடமென 
அரங்கெங்கும் கிடந்தன லைலக் மலர்கள்... 

Wednesday, 22 October 2025

மழை மோகம்

இரவின் சாளரம் 

மெல்லிய மழைத்துளிகள்

இருளின் களிப்பாய் பொழிகின்றன

நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்

கொட்டும் துளிகளைத் தொட்டன 

கந்தர்வ ஸ்பரிசமாய் 

கைகளைத் தழுவிய துளிகள் 

நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை

அவள் வாயிற்கதவத்தைத் தட்டின

முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக் 

கடக்கும் பொழுதினில் 

ஏற்பட்ட அணுக்கம் போன்றது

அவளுக்கும் அவனுக்குமான பற்று

தாமதிக்காமல் தாழ் திறந்தனள்

வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்

மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு 

கழுத்தில் இறங்கியது

முழுவதுமாய் நனைந்து நிற்க

அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்

மீண்டும் பெரும் கார்முகிலொன்று

இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது 

முதற்கதிர் எழும்வரை... 



Tuesday, 19 August 2025

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி

அவனுக்கும் அவளுக்குமிடையே

சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்

தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் 

அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்

இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள் 

சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள் 

அவளிதழின் துளிப் புன்முறுவல்

அவன் விரலைத் தீண்டிட 

நொடிநேரக் கடவுள் ஆகினன் 

மறுநொடியில் உபாசகன் 

மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள் 

வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்


Saturday, 7 June 2025

Thug life vs Adam's life



போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு படம் மோசமா எனில் நிச்சயம் கிடையாது. படம் நன்றாக இல்லை என்று விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு திரிஷா காட்சிகள்தான் காண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திரிஷா பகுதியை கத்தரித்து விட்டு இன்னும் தூக்கம் வரவைக்கும் நான்கு சண்டைக்காட்சிகளை மணி இணைத்திருந்தால் தக் இத்தனை எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார். 

திரைபடத்தின் மிகப்பெரிய குறை சண்டைக்காட்சிகள். இரண்டாம் பாதியில் அன்பறிவு மட்டுமே பெரும்பான்மையான காட்சிகளை இயக்கியது போல தோற்றம் ஏற்படுகிறது. மணிரத்னம் தனது கதாப்பாத்திரங்களை அத்தனை
எளிதாக மரணத்தில் முடித்துவிடமாட்டார். இருப்பினும் இத்திரைப்படத்தில் பலரும் சண்டைகளில் மாண்டு போகின்றனர். அத்தோடு அன்பறிவின் தாக்கம் அதீதமாகத் தெரிய காரணம் விக்ரமில் அடியாள் கூட்டத்துக்கு மத்தியில் ரோலக்ஸாக சூர்யா தோன்றும் அதே காட்சியில் இங்கே STR தோன்றி இனி தான்தான் சக்திவேல் என்கிறார். பின்னர் தக்காக ஏதாவது செய்வார் என எண்ணும்போது ஒருபுறம் கோவா, கேசினோ மறுபுறம் திருச்செந்தூர், கடல் என மணிரத்னத்தின் அழகியல் காட்சிகள் வருகின்றன. பிறகு மீண்டும் கோவா சண்டைக்காட்சிகள், படாரென தாவும் டெல்லி சண்டைக்காட்சிகள் என முதல்பாதியில் தெளிவாகக் காட்டப்பட்ட இடமும் காலமும் இரண்டாம் பாதியில் ஊசலாடுகின்றன. விக்ரம், KGF அளவிற்கான சண்டை Thug lifeக்கு தேவையில்லை. அதுவும் தற்காப்பு கலை சண்டைகள் இந்த படத்துக்கு எதற்கு எனும் வினா எழுகிறது. தமிழ் சினிமாவில் ஆபத்தான TRENDING தேய்வழக்குகள் உருவாகியுள்ளன. சாமானிய மக்களிடையே வெகு எளிதில் புழங்கும் Fruit mix பானம் போல, ஒரு திரைப்படத்தில் காமெடியா? சிறிதளவு இவர்கள், வில்லனா? இவர்களை போட்டு இரண்டு கண்டு கிண்டிவிட்டால் போதும், சாகடிக்க வேண்டுமா? அவர்களை அள்ளிப்போட்டு கதையை முடிக்கலாம், அபலையான கதாப்பாத்திரமா? இவர்களைப் போட்டு கிளறினால் முடிந்தது... இவ்வாறு தேய்வழக்காகவே தமிழ் சினிமாவில் பலர் மாறிவருகின்றனர். அன்பறிவும் அப்படியான தேய்வழக்கு Trendingஇல் சிக்கிவிட்டனரோ என்று Thug life பார்க்கும்போது தோன்றுகிறது. 

முதல் பாதி மிக அழகாக தெளிந்து செல்கின்றது. ரசிக்க வைக்கும் காட்சிகள் திரிஷா-கமல், கமல் -அபிராமி, வடிவுக்கரசி கமல், STR- கமலுக்கு நடுவே நிகழும் உரையாடல்கள், வெறும் சக்திவேல்-அமரன்- இந்திராணி ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து மட்டுமே தனித்து திரைக்கதை அமைக்கலாம். அவர்கள் மூவருக்கும் இடையே உள்ள மீறல்கள் மற்றும் சிடுக்குகள்தான் இதர கதாப்பாத்திரங்களின் தன்மையையும் கதையோட்டத்தையும் முடிவு செய்பவை. 

ஆனால் அவர்களை மையப்படுத்தாமல் காட்சிகள் எங்கெங்கோ செல்கின்றன. மேலும் இதில் சில அடிப்படைக் காட்சிகள் வசனங்களாக பேசப்பட்டு கடந்து போய் விடுகின்றன. உதாரணமாக கமல் ஒரு காட்சியில் அபிராமியை கிட்சனில் சமாதானப்படுத்தும் ஊடல் காட்சியில் முதல் சந்திப்பை மூன்றுவரி வசனமாகப் பேசிக் கடப்பார். அது காட்சியாக மாறியிருந்தால் அழகியல். 

மகாபாரதத்தில் சாந்தனு சத்தியவதியை மணம் செய்துகொள்ளும்போது சாந்தனுவின் மகன் தேவவிரதன் எனும் பீஷ்மன் துறவுகொள்வான். ஒருவேளை தேவவிரதனும் சத்தியவதி மீது காதல்கொண்டிருந்தால் என்னவாகும் என ஒரு கிளாசிக் திரைப்படமாக/ திரைக்கதையாக வரவேண்டிய Adam's Life, Thug life ஆகி பாதை மாறி 'பரவாயில்லை பார்க்கலாம்' commercial ரகமாக நிற்கின்றது.

Friday, 10 January 2025

பாவை மொழிகள் (4 - 6)

அரவம் துயிலும் பொருட்டு

மெதுவாய் அகழ்வில் ஊர

ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!

மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட

சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட

அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?

கிள்ளிடும் பொன்பாவாய்!

//

அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்

மடித்து வைத்த இழைப்பட்டு

கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்

கழற்றி எறிவானெனும் மதியின்றி

களவைத் தூண்டும் மடப்பட்டு

முந்தைய கூடலை நினைவுருத்தி

வருத்திடும் அணியிழையாய்!

//

புலரொளியில் நிலம்படர் ஈரம்

அவன் உள்ளங்கை மணம்

அந்த நாகலிங்கப் பூக்கள்

கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி

ஒற்றை பூவின் மணத்தை

மந்தணமாய் மெல்ல

கள்ளமாய் நகைத்திடும் மார்கழி

உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்

//

Wednesday, 18 December 2024

பாவை மொழிகள் - 3

வைகறைத் தூறல் நிலம் நனைக்க

உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்

விண்ணுலகிலும் அலருமென 

கந்தர்வன் அளித்ததன் கொடையவை

ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும் 

கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்

துவள்விழியைத் திறந்திடுமின்! 

பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்! 

Tuesday, 17 December 2024

பாவை மொழிகள் - 2

அஞ்சனமிடாத விழிகள் 

துயில் துறந்து விரிந்திட

சாளரம் விளிக்கின்ற வாசனை 

சிலம்புடைந்த பரலென 

சிதறும் தென்னமொக்குகாள்! 

உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்

நின் விழிநிறை அறியாது மடவாய்! 

பாவை மொழிகள் - 1

கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று

தேகம் அணைத்திடும் குளிர்

பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு

புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்

கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள் 

முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்

விழிதிறவாய் எம்பாவாய்!



Monday, 18 November 2024

மகன்றில் களவு 20

ஏதோவொரு கிரேக்க தெய்வத்தின் சாயல் அவன் 

சில தருணங்களில் டாஃப்னியைப் பின்தொடரும் அப்பலோ

பல இரவுகளிலும் சில பகல்களிலும் டையனஸிஸ்

தற்போது தொலைவில் எங்கோ

துணையாய் அவன் போர்வையின் வெப்பம் 

இன்னும் சில நினைவுச் சிதறல்கள் 

வானின் மேகங்களென 

மெதுவாய்ப் படர்ந்து கரைந்திட 

விழிநிறை நெடுவானின் 

நீலமுமாய் அவன் 

மீண்டும் தெய்வத்தின் கூர்மூக்குத் தீண்டல் வரையில் 

போதுமிந்த கொள்ளா நீலம்


- வெண்பா கீதாயன் 

Sunday, 15 September 2024

மகன்றில் களவு 19

ட்ரெவி நீரூற்றில் அவள் வீசிய இரண்டு நாணயங்கள்

அவளது இச்சைகளை நிறைவேற்றின

அழகியதொரு கூடலும் அளவானதொரு பற்றும்

எஞ்சிய மூன்றாவது நாணயத்தை 

அவனது சட்டைப்பையில் விட்டுச் சென்றனள்

மறுமுறை ஒரு பொழுதினில் அவனுடனான சந்திப்பு

மீண்டுமொரு கூடல்

தேவதையின் கொடையென 

மறுநாள் துயில் கலைந்தவளுக்கு

ஒரு கோப்பைத் தேநீருடன்

அவன் உள்ளங்கை வெப்பம் 

அவளது பகற்கனவுகளில் 

சன்னதமாடும் தெய்வங்களில் ஒன்றாக

வெகுண்டது மூன்றாவது நாணயம் 

ரோம் நகரின் ஏதோவொரு எல்லையில்

தனித்த மணத்துடன் எழுந்த ஒரு காட்டுப்பூ

காவலுக்கு ஓர் அணங்கு

வீனஸ் தன்னிலை தவறி விழியிமைத்தனள்

நானோ நொடிதனில் 


- வெண்பா கீதாயன் 

Thursday, 29 August 2024

மகன்றில் களவு 18

மெல்லிய க்லெஸ்மர் இசை

இரவு விருந்தில் டார்க் சாக்லேட் 

இடையே சில மிடறாய் மது

பொருளற்ற உரையாடல்கள் 

பொருளெனச் சிறு சிணுங்கல்

அவள் தோளில் சிதறும் கற்றைமுடி

அருவியாய் இடைநெளிந்தூற

இடைமறித்திடும் அவன் நோக்கு

இருளும் கொஞ்சம் நாணிடும்

தீக்கீற்றல்களாய் மீட்டல்கள் 

அவன் பின்கழுத்தின் கூச்சத்தை

தீண்டிடும் நகங்கள் 

சாத்தானின் வாசனையாய் படர்ந்திடும் மென்மோகம்

கடவுளின் வழியாய் அவள் அஞ்சன விழிகள் 

இரண்டும் அவனுக்கு 

இரவின் உண்டாட்டென


- வெண்பா கீதாயன் 

காதல் - Madness vs Toxic

காதல் என்கிற உணர்வு முற்றிலும் madness சார்ந்தது. இயல்பாகவோ logicalஆகவோ consciousஆகவோ ஒருவர் இருந்தால் காதலில் விழவே முடியாது. தைரியமாக இருவ...